Disable text selection

May 29, 2012

Irresponsibility and obscenity!

இன்று பெண் பிள்ளைகளைப்பெற்றவர்களின் பொறுப்பில்லாத போக்கால் தான் பல குடும்பங்கள் சீரழிகின்றன.

பெண்களை மதிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு அம்மாக்காரி சொல்லித்தர வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே போல ஆண்களையும், குறிப்பாக கணவனையும் அவன் வீட்டாரையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டியது பெண்களின் பெற்றோரின் கடமை ஆகும்.

முன்னதை எதிர்பார்க்கும் அவர்கள் பின்னதை செய்வதில்லை பெரும்பாலும்.

பெண்ணுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டு, ஒரு வீட்டு வேலையும் செய்ய தெரியாமல் படிக்க வைத்து விடுவது. முப்பது வயது வரையில் வேலைக்கு போக விட்டு விடுவது. அந்த சுதந்திரத்தையும் சுய சம்பளத்தையும் பார்த்த பெண்ணுக்கு யாரையும் மதிக்க வேண்டும் என்ற நினைப்பு இருப்பதில்லை. அவனுக்கு நான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டேன் என்ற அகங்காரமும் ஆங்காரமுமே இருக்கிறது. யாரையும் "எவனையும்" சார்ந்து நானில்லை என்ற வீராப்பு..... இல்லாத ஆணாதிக்கத்தை இருப்பதாக நினைத்து நம்பிக்கொண்டு எதற்கெடுத்தாலும் நீயா நானா போட்டி போடுவது இத்தகைய பெண்கள் தான் என்பது கண்கூடு. சண்டையின் பொழுது ஆண்கள் வாய் மூடி போய் விடுவது பலவீனத்தால் அல்ல. இதை வளர்த்தால் குடும்பம் இரண்டாகி விடுமே என்ற அக்கறையால் சகித்துக்கொண்டு போகிறார்கள். அவ்வளவே.

இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமைகளை வகுத்துக்கொடுத்து இருக்கிறது. அதன் படி இருக்காமல் ஏதோ சமத்துவம் சரிசமம் என்று கூப்பாடு போடுவது சிறு பிள்ளைத்தனமான வேடிக்கை. பெண்களை கேட்கிறேன், என்று உங்களுக்கு சமத்துவம் இல்லாமல் போனது என்று தான் புரியவில்லை. ஆண் வெளியே சென்று பொருள் ஈட்டினால் நீங்கள் வீட்டில் அத்தனையையும் செய்கிறீர்கள். பாதி வேலை நீங்கள் பண்ணும் போது, நீங்கள் இல்லாமல் வீடு ஓடாது என்கிற போது அது சமத்துவம் தானே?

ஏதோ சில ஆண்கள் மதிக்கவில்லை என்றால் உங்கள் பங்கை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர சரிசமன் என்று உங்கள் கடமையை உதறி விட்டு தோள் மேல் பையை போட்டு கொண்டு நானும் வேலைக்கு போவேண்டா உன்னை விட சம்பாதிப்பேன் என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கலாம். குடும்பத்துக்கு ஆகாது.

பெண்ணுரிமை கூச்சல் போட தெரு சரியான இடம். குடும்பம் அல்ல.
அது ஆணும் பெண்ணும் தெரிந்தே அன்பினால் கட்டுண்டு இருக்கும் கூடு. சிறை அல்ல. கூடு வேறு சிறை வேறு.

பெண்ணைப்பெற்றவர்கள் சமூக அக்கறை இல்லாமல் பெண்களையும் ஆண் பிள்ளைகளை போலவே வளர்ப்பதால் ஒரு குடும்ப வாழ்வுக்கு உரிய மன நிலையையும், வீட்டு வேலைகள் எதையுமே பண்ணத்தெரியாத பெண்களாகவும் வளர்கிறார்கள் என்பது நிதர்சனம். கலியாணம் ஆன பின்னால் இதனால் பிரச்சினை வெடிக்கும் போது மாப்பிள்ளையை மட்டும் குறை சொல்வது. பெண்ணை பெண்ணாக வளர்க்காததால் வந்த வினை.

அதிலும் இந்த பெண் வீட்டார், சிறுவயது முதலே ஏதோ மாப்பிள்ளை வீட்டார் பேய் கணங்கள் போலவும் இந்த பெண் எப்படி அங்கே போய் இருப்பாளோ என்ற கவலை இருப்பது போலவும் தங்கள் மாமியாரோடு தாங்கள் போட்ட சண்டைகளை இந்த பிஞ்சு பெண்ணிடம் சொல்லுவது........ "சாமர்த்தியமா நடந்துக்கோடி", "புருஷனை உன் கட்டுப்பாட்டில் வச்சிக்கணும்", "எந்த முடிவையும் ஆரம்பத்தில் இருந்தே நீ எடு"...... என்ன கேவலமான புத்தி? அதிலும் சிலர் ஆபாசமாக "தலையணை மந்திரம், சொக்கு பொடி" எல்லாம் போட சொல்லுவார்கள்........ முந்தானையில் முடிந்து கொள்ள சொல்லுவார்கள்.......

ஆண் மகன் என்ன பந்தய பந்தா? மாமியார் மருமகளிடம் இருந்தும் மருமகள் மாமியார்டம் இருந்தும் உரிமை போராட்டம் நடத்தி பறித்து விளையாட? ஏன் அவன் ஒரே சமயம் மகனாகவும் கணவனாகவும் கடமையோடு இருக்க முடியாதா? இருக்க கூடாதா?


May 25, 2012

Useless wife

மட்டி லாதபொருள் மனைவிகண் வாய்த்தாலும்

கட்டியவன் கைத்தாரா ளாயின் - குஞ்சுடைத்த

முட்டையவள் வெட்டியகை கண்டீரோர் காஞ்சிரந்தான் 

காய்த்தா லென் காய்தராக்கா லென்?

உரை:

அளவிட முடியாத செல்வம் மனையாளுக்கு சம்பளமாக வாய்த்தாலும், அவள் அதை கணவனுடைய கையில் தந்து பகிர்ந்து வாழும் குணமில்லாதவளாயின், அத்தகைய சுயநலமிக்க பெண், குஞ்சு பொரிந்து வெளியே வந்த பின் எஞ்சும் முட்டை ஓடு குஞ்சுக்கு பயன் தராதது போலவும், வெட்டப்பட்ட அழகிய கை உடலுக்கு உதவாதது போலவும், கணவனும் மனைவியும் மனமொத்து இயைந்து நடத்தும் இல்வாழ்வுக்கு பயன் இல்லாதவளே ஆவாள்.

கண்டோர் வெறுக்கும், பசிக்கு உதவாத காஞ்சிர மரம் காய்த்தால் என்ன காய்க்காவிட்டால் என்ன?

கண்ணனென் காதலன் - 1

பல்லவி:

காதலெ னும்மது வுண்டோம் - கோதையர்

மாதவ னாஞ்சிறு மாமல ரான்மிசை

காதலெ னும்மது வுண்டோம்;

அனுபல்லவி:

ஆதியி லாதியெம் மாயனவ் வேய்துளை

யூதிவ ருங்குழ லாயன ருந்தவர்

ஓதும றைபொரு ளானமு குந்தனின்

கோடிநி லாவொளி சோதிப தம்மிசை

(காதலெனும்)

சரணம்:

போதல்ம றந்தவன் காதலி னால்தரு

போதிநி ழல்துற வோனிகர் ஞானியர்

காதலு டன்னுற வாடிம கிழ்திரு

மாதவ னில்கலந் தேகிடவே யொரு

(காதலெனும்)

May 24, 2012

கடமை!

ஆழிப் பேரலை அடங்கா துயர்ந்து
ஊழித் தாண்டவ மாடிய வேளை
அக்கினிக் கொழுந்து பட்டினி கிடந்தது
புக்கிடஞ் சுட்டுப்பொ சுக்கிய வேளை
கற்றவர் வற்றா கேள்வியு ரைத்திட
உற்றவர் செற்றவர் பற்றறு வேளை
நல்லோர் தீயவர் வல்லார் இல்லார்
கல்லார் பொல்லார் பேதங் கொள்ளார்!

உரை:

ஆழிப்பேரலை ஊழிக்காலத்தே வருவது போல உயர்ந்து ஆடி ஊரை அழிக்க நிலம் புகும் காலமும், செவ்விய நாக்குகளை உடைய அக்கினி பசிகொண்டது போல சென்ற இடமெல்லாம் சினந்து சுட்டுப் பொசுக்கும் வேளையிலும், கற்றவர் தமது உயர்ந்த அறிவினை உரைக்கும் பொழுது, வேண்டியவர் வேண்டாதவர் என நினைக்காத வேளையிலும், இந்த மூவர் (கடல், நெருப்பு, சான்றோர்) நல்லவர், தீயவர், வலியவர், மேலியவர், கற்றவர், பொல்லாதவர் என்ற பாகுபாடின்றி, தமது கடமையை முடிப்பர் (அதாவது கடல் எல்லாரையும் மூழ்கடிக்கும், தீ எல்லாவற்றையும் எரிக்கும், சான்றோர் யாவர்க்கும் அமுதம் போன்ற இன்னுரைகளை நவில்வர்!)

Infinite Brahmam

இன்று திடீரென்று தோன்றியது, ஒரு ஷாந்தி மந்த்ரம் பற்றி எழுத வேண்டுமென்று.

அது ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் வரும், ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும் வரும். ஷாந்தி மந்த்ரம். 

ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே| 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே|| 

என்று வரும்.

இதன் நேரடி அர்த்தம் - அங்கிருப்பதும் பூர்ணம், இங்கிருப்பதும் பூர்ணம், பூர்ணத்தில் இருந்து பூர்ணமான வஸ்துவே உதயமானது........ அப்படி பூர்ணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டாலும் எஞ்சியதும் பூர்ணமே. 

இதன் பொருள் உட்கருத்து என்னவெனில்,

பரம்பொருள் பௌதிக கணக்குகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. (கடவுள் இருக்கிறாரா என்று கேட்பவர்களுக்கு இது புரியாது தான்).

சரி. மேலோட்டமாக பார்த்தல் ஏதோ ஏறுக்கு மாறாக உள்ளது போலவே தோன்றும்.

ஆனால் இதை அணுகுவது சுலபம்.

ஒன்றில் இருந்து இன்னொன்றை எடுத்தால், மீதி குறைவாக தானே இருக்க வேண்டும்? அது தானே விதி? 

ஆனால் இங்கே என்னடா என்றல் பூரணத்திலிருந்து பூர்ணம் உதயமானதாம், அந்த பூர்ணம் அப்படியே இருந்ததாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்?

ஒரே வாய்ப்பு தான் இருக்கிறது. ஒன்று அந்த பூர்ணம் பூஜ்யமாக இருக்க வேண்டும். அல்லது அளவற்றதாக இருக்க வேண்டும் (infinity).

சூன்யமாக இருந்தால் சூன்யத்தில் இருந்து எப்படி இன்னொன்று "உதயமாக" முடியும்? முடியாது இல்லையா?

அப்பொழுது அந்த ஆதி பூர்ண வஸ்து infinite வஸ்துவாக தானே இருக்க வேண்டும்?

ஆம்.

அது தான் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.

எந்த மூல பிரகிருதி ஆதார பிரம்மமாக ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறதோ அதே பூர்ண வஸ்து தான், தனது சங்கல்பமாகிய சக்தியினால் இத்தனை ஜகத்தாகவும் வெளிப்படுகிறது.

அதனால் ஜகம் வேறு, பரமாத்மா வேறு அல்ல.

எந்த பரம்பொருள் ஆத்ம ஸ்வரூபமாக அனைத்தையும் வியாபித்து சூக்ஷ்மமாக இருக்கிறாரோ அவரே தான் இந்த ஜகத்தாகவும் இருக்கிறார்......

வாஸ்தவத்தில் பூர்ணத்திலிருந்து எதையும் உருவாக்கவில்லை. அதுவே தான் இதுவாக காட்டிக்கொண்டது. அவ்வளவு தான். அசையாத ஆத்ம ஸ்வரூபம் சிவம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம் அதுதான். அது அசையாது, அழியாது, ஊர் ஊராக போய் உபன்யாசம் பண்ணாது........ நாம் நமஸ்காரம் பண்ணினால் கூட அதற்கு தெரியாது. வேறுபாடற்ற நிலையில் வணங்குபவன் யார் வணங்கப்படுபவன் யார், வணக்கம் தான் எது? மூன்றும் ஒன்று தான்.

இதை தான் நான் எனது கவிதையில் "அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்" என வெளிப்படுத்தியது......

ஏதோ என்னால் இயன்றதை, எனக்கு தெரிந்ததை எழுதினேன்.

Discretion

சேர்தலும் பொருதலும் சிற்றிடம் தவிர்மின்

சிற்றிடம் சேர சீரறும் - வாதில்

சிற்றிடம் பொருதார் சிறுசுரை விதைபோல்

பற்களும் நற்கையில் உற்றிடல் ஆதலின் 

சேர்தலும் பொருதலும் சிற்றிடம் தவிர்மின்!

உரை:

சிறந்த புகழுடைய மக்களே! இதை கேளுங்கள். உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்;

சிறியோரிடம் நெருங்கி உறவாடுவதால் உனது புகழாகிய சீர் அறும் (அற்று அழிந்து போகும்);

சிறுமதி படைத்த கல்லாத, அடக்கமில்லாத புல்லனுடன் வாதப்போர் புரிவீராயின், சுரையினது வெள்ளிய விதைகள் போல உமது பற்கள் உமது கைகளில் வீழக் காண்பீர் (மூடனான அவன், வாதம் புரியும் மதி அற்றமையால், தனது கைவன்மையால் அடித்து துன்பம் தருவான்).

ஆதலால் கல்வி எனும் அழகு படைத்த மக்களே, உறவென மகிழ்ந்து சேர்வதற்கும், வாதப்போரில் மோதுவதற்கும் சிறுமதி படைத்த மூடர்களை தவிர்த்து விடுங்கள்...


அன்புக்கு-பேதமுண்டோ?

குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
சென்றிடும் யாவர்க்கு மொளிகாட்டு மன்றோ;
அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?

உரை:

உயர்ந்து பலரும் காணுமாறு விளங்கும் பெருமை பொருந்திய குன்றின் முகட்டில் அன்பு பொருந்திய அறிஞர் ஒரு பெரும் அகல் விளக்கினை ஏற்றுவாராயின், ஒளி பொருந்திய அழகிய அவ்விளக்கு, காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும் இயல்பினை உடைய அந்த காட்டு வழியே செல்லும் மாந்தர்க்கு ஒளியினை நல்கும்.

இவன் நல்லவன், இவன் பொல்லான் என்று வேறுபாடு பார்த்தா அவ்விளக்கு சிறந்த ஒளியினை வழங்கும்? யாவர்க்கும் அன்றோ?

அங்ஙனம், தம் நெஞ்சகத்தே அன்பெனும் அமுதத்தை கொண்ட பண்புடைய கற்றவர், அவ்வன்பினை பேதம் பார்க்காது அனைவர்க்கும் அளித்து தாமும் இனிது மகிழ்ந்திருப்பர்.

May 23, 2012

அன்னையினருள்


ஸ்ரீ காமாக்ஷி துணை:


மயங்கிய நிலை:

தீதிது செய்ய நலமிதென் றறியோம்

மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;

சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்

செய்யா தன செய்வோம்;

உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்

பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே

செய்யா தனபல செய்துழி வீழ்வோம்

மெய்யா னதுகா ணோம்.

அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்

கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்

உண்டான் உலகம் உலகே ழானான்

உண்மை யதை யுணரோம்;

உய்த நிலை:

போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை

பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;

தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற

சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!

உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை

கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;

வேறென்ற நிலை களைவா ளொருமாயத்

திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .

May 21, 2012

ரொம்ப-நல்ல-ஜாதகம்?

என்ன தான் ஜாதகம், கிரகம் என்று நாம் அலசினாலும், ஜாதகம் என்பது ஒருத்தருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தோராயமாக தான் சொல்ல முடியும். எப்படி என விளக்குகிறேன், நான் நினைப்பதை.

ஒருத்தருக்கு ரொம்ப நல்ல ஜாதகம் என்று வைத்துக்கொள்வோம் இன்னொருத்தருக்கு அவ்வளவாக சுகமில்லை ஜாதகம். நாம் ஒத்து பார்ப்பதில் சரியாக இருக்க வேண்டும் அல்லவா, அதனால் என்ன பண்ணலாம், முன்னவருக்கு எந்த எந்த வீடுகள் அம்சமாக உள்ளவோ, அவை எல்லாம் பின்னவருக்கு அவ்வளவாக சுகமில்லை. (ஏன் சொல்கிறேன் எனில், அவருக்கு சுகமில்லாத சில இவருக்கு ஜாம் ஜாம் என்று இருக்கலாமே.... அதனால்);

தொழில் ஸ்தானம் என்றே வைத்துக்கொள்வோம், ஒரு பேச்சுக்கு. முன்னவருக்கு நல்ல அமைப்புகள். பின்னவருக்கு கொஞ்சம் முடக்கமான அமைப்பு.

ஆனாலும், முன்னவர் வெற்றி பெற கடும் உழைப்பும், தெய்வ பக்தியும் இருந்தாக வேண்டும். இல்லை என்றால் அவர் ஜாதகம் அவரை இலவசமாக எல்லாம் உச்சாணியில் வைக்காது. அப்படியே வைத்தாலும் சமயத்தில் (சரியில்லாத தசா புக்திகளில்) கீழே விழுந்து அடிபடுவார்.

பின்னவர் கடுமையாக உழைத்தார் என்றால், எல்லாவற்றையும் மீறி வெல்வார், முன்னேறுவார்.

இந்த மருந்தை அய்யன் வள்ளுவன் சொன்னாரே

"தெய்வத்தா னாகாது எனினு முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"

A good horoscope is like the combination of good pitch, weak opposition bowling attack, home ground advantage and good form of the batsman in question. These make it easy for him to score a century. But still he has to play with sense and judgement otherwise he will get out at any point of time.

A not so good horoscope is like a green seaming track, formidable opposition bowling attack, foreign conditions and not so good form of the batsman in question. these make it difficult for him to score a century. But still, if he plays with the best of effort he can, cautiously and with determination, he can still score a century.

And what more, this fighting century amidst challenges will be remembered and admired by people more than the relatively easier century in easy conditions.

So, let's face life as a challenge and never give up. If we are righteous, God will be by our side. He will reduce the disasters that have to come to us due to horoscope. For instance what should have been death would be a small accident.

Let's live righteously and happily!

May 20, 2012

காதலி தெய்வம்: An explanation!

என்னுடைய களிப்பில் கவிதை என்ற பதிவில் காதலி தெய்வம் என எழுதி இருந்தேன். பலர் அதற்கு பாராட்டுக்களை தந்தனர். சிலர் புருவம் உயர்த்தினர். அதற்கான ஒரு தன்னிலை விளக்கம், இதோ!
எத்தனை ஜீவன்கள் இந்த பரந்த நிலவுலகில்? அத்தனைக்கும் அம்மாவாக இருப்பது அந்த பரதேவதை. நமக்காக அம்மாவான ஜகன்மாதா தேர்ந்து கொடுத்த ஜீவன் இந்த மனைவி, கோடியில் ஒருத்தி என்று ஒரு சிறு நினைப்பு கணவனுக்கு வந்து விட்டால், மனைவியை தெய்வம் என்று சொல்லமாட்டானா என்ன? 



யாராவது ஒருத்தரிடம் மனஸை அர்ப்பணம் பண்ண வேண்டும். நமக்கென்று வாழாமல் அவருக்காக வாழ்வது நம்மை ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு ஏற்றும். ஈகோவை கரைக்கும். யார் யாருக்காகவோ வாழ்வதை விட உயிரில் பாதியான மனையாளுக்காக வாழ்வதில் தப்பில்லை. தூய துணைவியை ஆராதிப்பதும் நன்றன்றோ?



மனைவியரை மதிக்காத பயல்களுக்கெல்லாம் வெகு சுலபமாக  கலியாணம் நடந்து விட்டது போலும். காத்திருந்து, தேடி அலைந்து, நமக்கு கலியாணம் ஆகுமா ஆகாதா என்று ஏங்கி, கோவில் படி ஏறி இறங்கி, வேண்டி பெற்ற மனைவிடம் "காதலி தெய்வம்" என்று நினைப்பது வெகு இயல்பானது அன்றோ? பசித்தவனுக்கு தானே சோற்றின் அருமை தெரியும்?



(இவை அத்தனையும் பெண்களுக்கும் பொருந்தும்).......