Disable text selection

January 23, 2013

HELP - elderly father of my friend is missing

Dear readers,

The father of my friend Mrs. Uma Dasharathi has gone missing from their home in Trivandrum from Nov. 8 2011. All possible efforts have been made from her side with assistance from Kerala, TN, Karnataka Police and Airforce (Her husband is a Captain in Indian Airforce). IG south zone in Madurai has been informed and also the CM of Kerala is taking personal interest in this case.

I have attached a message below, with her father's photographs. This is the message we published in Tamil Dailies. I and my friend Mrs. Uma Dasharathi request you to kindly publish this in your blogs and circles, so that people who follow your blog and classroom may be able to help out if and when they spot this gentleman. He is 80 years old and suffering from Dementia, undergoing medication. He has lost his memory. That is the problem.

Regards,
Bhuvanesh

+++++


அன்புள்ள வாசகர்களே, வணக்கங்கள்.


திருவனந்தபுரத்தில் RLNRA-41, Planning Board Lane, Rajalakshmi Nagar, Pattom என்னும் முகவரியில் எங்களுடன் வசித்து வந்த எண்பது வயதான எமது தந்தையார் திரு. நாராயணன் அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் காணவில்லை. அவர் தனது ஞாபக சக்தியை இழந்துள்ளார். அதன் காரணமாக மருந்துகளும் தினசரி உட்கொள்ளுகிறார். நவம்பர் எட்டாம் தேதி மதியம் ஒரு மணி வாக்கில் வெளியே நடந்து வருவதாகக்கூறி சென்றவர், இன்றளவும் திரும்பவில்லை. 


நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்யப்பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் பத்தாம் தேதி இவரைப்பற்றிய விவரங்கள் மலையாள மனோரமாவில் வெளியிடப்பெற்றது. தூர்தர்ஷன் மற்றும் உள்ளூர்த்தொலைக்காட்சி அலை வரிசையிலும் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளிவந்தன. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் மூலம், வயது முதிர்ந்த எங்கள் தந்தையாரை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. திருவனந்தபுரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பெற்றுள்ளன. 

தந்தை காணாமல் போன நவம்பர் எட்டாம் தேதி முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கீழ்வருமாறு:

8 Nov 12 : 3-30 pm:
பட்டம் மற்றும் கேசவதாசபுரம் பகுதிகளில் தேடினோம். எமது தந்தை ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு வேளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பெற்று உள்ளாரா என தேடினோம். அவர் அங்கு இல்லை என எங்களுக்கு தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி காவல் நிலையம், காவல் துறைக் கட்டுப்பாட்டறைக்கு இந்த செய்தியை அனுப்பியது. நாங்கள் அதே சமயத்தில் எங்கள் குடியிருப்புப்பகுதியில் தேடினோம். பேரூர்க்கடா காவல் நிலையத்தில் எங்கள் தந்தையாரை தேடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்,

9 Nov 12:
பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்தோம். அன்றே, தூரதர்ஷனிலும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசையிலும் அறிவிப்புகள் வெளிவந்தன.

10 Nov 12:
காணாமல் போன எமது தந்தையாரை பற்றி மலையாள மனோரமாவில் செய்தி அறிவிப்பு வெளியானது.

 11 Nov 12:
திருன்வனந்தபுரம் முழுவதும் காணாமல் போன எமது தந்தையாரைப்பற்றி போஸ்டர்கள் அச்சிட்டு ஓட்டப்பெற்றன.

12 Nov 12 to 25 Nov 12:
எமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் திருவனந்தபுரம் நகரின் எல்லா மூலைகளிலும் தேடல் நடைபெற்றது. ரயில்வே காவல் துறையும் உஷார்படுத்தப்பெற்றது. தந்தையாருடைய சொந்த ஊர் பாலக்காடு என்பதால் அங்கும் சென்று ஊர் முழுவதும் தேடினோம். அவர் பணிபுரிந்த பெங்களூர் HAL பகுதியிலும் அந்த பகுதி தபால் துறையினர் உதவியுடன் தேடினோம். விமானப்படையினர் உதவியுடன் கேரள – தமிழக எல்லைப்பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியில் தேடினோம். பலனில்லை.
 
26 Nov 12:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. ஊம்மன் சாண்டி அவர்களை சந்தித்து, இந்த விஷயத்தில் அவருடைய உதவியை கோரி மனு கொடுத்தோம். அவர், ADGP அதிகாரியான திரு ஹேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்குமாறு சொன்னார். அவரையும் பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் அவர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.
 
29 Nov 12:
பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் திரு. பிரதாபன் அவர்கள் எங்கள் தந்தையை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டி எங்களைத்தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர், எங்கள் காரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்த்து இந்த பெரியவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். நாங்கள் இவர் எமது தந்தையார் சொன்னதும், அந்த ஆட்டோ ஓட்டுனர், எங்கள் தந்தையார் அன்று மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு சாலையை கடக்க முயன்று கொண்டிருந்ததாக கூறினார். இதை வட்ட ஆய்வாளர் திரு பிரதாபன் அவர்களிடம் வாக்குமூலமாக தந்தார்.. அன்றே, ஏசியாநெட் நிருபர் வந்து தகவல்களை சேகரித்தார். ADGP, CCTV ஆவணப்படத்தை கட்டுப்பாட்டறையில் இருந்து நாங்கள் காண ஏற்பாடு பண்ணினார். அப்போது, அந்த ஆவணப்படத்தை கண்ட பொழுது, சாலையை கடந்தது எங்கள் தந்தை தான் என்று உறுதி ஆனது. இதனை அவர் சாலையை கடக்க உதவிய போக்குவரத்துக்காவல் துறை அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

30 Nov 2012:
ஏசியாநெட் தொலைகாட்சி எனது பேட்டியுடன் கூடிய அறிவிப்பை செய்திகளுக்குப்பின் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒளிபரப்பியது. போக்குவரத்து துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பெறுவர் என ADGP உறுதி கொடுத்தார்.

1 Dec 2012 – 4 Dec 2012:
எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர் என்பதால், கோயில்களிலும் வழிபாட்டு தளங்களிலும் தேடுதல் தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் தேதி, காவல் துறையிடம் ஐம்பது போஸ்டர்களை தருமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். CCTV ஆவணமும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

 5 Dec 2012:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. ஊம்மன் சாண்டி அவர்களை மீண்டும் இவ்விஷயத்தில் உதவி கோரி அணுகினோம். அவரது உதவியாளரை அணுகுமாறு அவர் கூறினார். அவரது உதவியாளர் ADGPயிடம் பேசி, அவர்களால் முடிந்த அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி கூறினார். பாதுகாப்புத்துறை அதிகாரியான திரு. அனில் காந்த் IPS அவர்களை சந்தித்து பேசினோம். 

7 Dec 2012:
நெடுமாங்காடு பகுதிகளில் பல்வேறு அநாதை இல்லங்களில் தேடினோம்.

12 Dec 2012:
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி தினமலர் செய்த்திதாளில் தந்தை காணவில்லை என அவருடைய படத்துடன் அறிவிப்பு வெளியிட்டோம்.

20 Dec 2012:
கேரளாவில் உள்ள அனைத்து பொது சேவை NGO அமைப்புகள் கூட்டம் டிசம்பர் இருபதாம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளத்தின் பலவேறு பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களின் சார்பில்  வந்தவர்களுக்கு, காணாமல் போன தந்தையாரின் விபரங்கள் அடங்கிய படத்துடன் கூடிய போஸ்டர்கள் அளிக்கப்பெற்றன. 

4 & 5th Jan 2013:
தந்தையார் இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் குமரியில் இருந்து மதுரை வரை கோயில் குளங்களில் தேடினோம்.

15 Jan 2013:
பேரூர்க்கடா காவல் துறையினருடன் வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தேடினோம். இருப்பினும் இன்றளவும் எங்கள் தந்தையார் கிடைக்கவில்லை.

January 11, 2013

இன்றைக்கு ஹனுமான் ஜெயந்தி

இன்றைக்கு ஹனுமான் ஜெயந்தி! 

எனக்கு சின்ன வயசில் இருந்தே ரொம்பப்பிடித்தமான ஹீரோக்களில் ஹனுமான் ஒருத்தர். குழந்தைகளின் கற்பனையை தூண்டி விடுவதில் அவருக்கு நிகர் அவரே தான். அப்புறம் வளர வளர அவரை ஒரு சாமியாக்கி கும்பிட வைத்தாகி விட்டது. குழந்தைத்தனமான சிநேக பாவம் தான் எனக்கு என்னமோ மிகவும் ருசியாக இருக்கிறது.

ஒருத்தன் கஷ்டப்படுகிறான், துயரத்தில் துடிக்கிறான், புலம்புகிறான் என்றால், “அவனும் மனுஷன் தானே, மனுஷ இயற்கை” என்று சப்புக்கொட்டி ஆறுதல் சொல்லுகிறோம். அவனை நம்மில் ஒருவனாக பார்க்கிறோம். இன்னொருத்தனோ, அல்லது இவனே கூட, ஒரு நாள் பரம சாந்தியாக, பூர்ணத்த்வத்தை அடைந்து விட்டான் என்றால் அப்போது, “அவர் தெயவாம்சமப்பா, மகா ஞானி, பரம யோகி, நம்மாலே முடியுமா?” என்று கும்பிடு போட்டு விட்டு போகிறோம். துயரமும் கண்ணீரும் தான் மனுஷ இயற்கையா? எல்லையில்லாத பரம நிலை, சிநேக பாவம் மனுஷ இயற்கை இல்லையா? பெரும்பான்மை நிலையை வைத்து எப்படி அது மனுஷ இயற்கை இல்லை என்று சொல்லலாம்? 

நல்ல விஷயங்களை உசந்த மனுஷர்களை நாம் அவதார புருஷர்களாக்கி கோயிலில் அடைத்து விட்டு, நம் குட்டையில் ஊறும் மட்டைகளை மட்டுமே நம்மவர்கள், சக மனுஷர்கள் என்று வைத்துக்கொள்வது சின்னத்தனம். இதில் வேடிக்கை என்னவென்றால், நம் குட்டையில் ஊறிய மட்டை ஒன்று இனியும் ஊற வேண்டாம் என்று கரையேற நினைத்தால், எள்ளி நகையாடுவோம். அடித்துப்பிடித்து கரையேறி விட்டால், அதே மட்டை மகான் ஆகிறது! அப்புறம் அந்த மட்டை “நம் மனுஷாள்” அல்ல. “அடடா, ஒருத்தன் பூர்ணனாக முயற்சி பண்ணுகிறானே, முடிந்தால் நாமும் கூட்டு சேருவோம், இல்லையா அவனுக்கு உதவுவோம், அதுவும் இல்லையா, சும்மா இருப்போம்” என்று அநேகம் பேர் இருப்பது இல்லை. 

பணம் காட்டி ஆசை காட்டி பள்ளிக்கூடம் கட்டுகிறேன், சோறு போடுகிறேன் என்று சொல்லி ஆள் சேர்க்க தூண்டில் போடும் மதம் அல்ல நம் மதம். கத்தியை காட்டி மிரட்டி கூட்டம் சேர்க்கிற, இருக்கிற கூட்டத்தை தக்க வைக்கிற மதம் அல்ல நம் மதம். நம் மதத்திற்கு ஜீவநாடி ஒவ்வொருத்தரும் தன்னை பூர்ணனாக்கிக்கொள்ள முயல வேண்டும். லக்ஷம் பேர், கோடி பேர் முயன்றால் அதில் ஒருத்தர் பூர்ணரானால், அவர் அணுக்கிரகத்தாலே, நாமும் ஆவோம். 

அவர் ஆத்மசாதகம் பண்ணும் நாட்களில் உதவாமல், அவர் மகானான பின் ஆசி மட்டும் கேட்டால் அது நியாயமாகாது. 

சாதுக்களையும், சாதகர்களையும், வேத-வித்யார்த்திகளையும் ரட்சிக்க வேண்டும், பணம் என்றில்லை – அன்னம், வஸ்த்ரம், தாங்கும் இடம், நம்மால் இயன்றதை செய்யத்தான் வேண்டும்...... 

அப்போது தான் அவர்களில் ஒருத்தர் பூர்ணத்வத்தை அடையும் பொழுது, அவரிடம் நமக்கு அருள் பெற அருகதை உண்டு. சேவையும் தான தருமமும் பிறருக்கு அல்லவே அல்ல. 

நீ என்ன சேவை செய்தாலும் பூரணன் ஆகாதவன் அழுவான். பூர்ணனுக்கு உன் உதவி தேவை இல்லை. உன் சேவையும் தானமும் தருமமும் உன்னை சுத்தி செய்யவே!

இப்படி எல்லாம் சேவை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பக்வியானால், ஒரு நாள் உள்ளே இருக்குமாத்ம ஜ்யோதியானது ஒரு நாள் பளீரென்று பிரகாசிக்கும். பட்டப்பகல் என்ன திடீரென்றா வருகிறது? கொஞ்சம் கொஞ்சமாக சித்தம் சுத்தமாகி, கீற்று போல ஆத்மா பிரகாசித்து, ஒரு நாள் பூர்ண ஜோதியாக நமக்கு அடிக்கும். அது என்றுமே பூர்ணம் தான். மனசு நசியும். அப்போது  அஹங்காரம் இல்லாமல், தனி மனசு இல்லாமல், பரப்பிரம்மம் தான் மிச்சம் இருக்கும். 

எத்தனை தான் ஆற்றல் உடையவராய் இருப்பினும், ஆத்மா ஸ்வரூபியான ராமனுக்கு தான் தாசன் என்று கட்டுப்பட்டுக்கிடந்தார் ஹனுமான். மற்ற சக்திசாலிகள் துராத்மாக்களாக அழிந்தார்கள் அஹங்காரத்தால். இவரோ தனது மனசை ராமனுக்கு அர்ப்பணித்தார். இன்றளவும் அருள்பாலிக்கிறார், ராமனருளால். 

அவர் தாள் வணங்கி, நாமும் நமது சித்தத்தை ராமன் பாதங்களில் சமர்ப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரத்தை, தனி மனசை நசிப்போமாக. 

+++++














January 1, 2013

கலாசாரம், அன்றும் இன்றும்

அன்று பாஞ்சாலி சபதம்/திரௌபதி வஸ்த்ர-ஹரணம் சினிமாவில் நடிக்க எந்த தமிழ்ப்பெண்ணும் முன் வரவில்லை. கேட்ட போது அவர்கள் சொன்னார்கள் – “என்னுடைய சேலை முந்தானையை, நடிப்பிற்க்காக கூட ஒரு அந்நிய ஆண்மகன் தொடுவதை நான் அனுமதிக்க முடியாது!”.... இதுவன்றோ கற்பின் மாண்பு. இத்தகைய பெண்களை நான் வணங்குகிறேன்.

“வயசு வந்த பொண்ணுக்கு தம்பியே ஆனாலும் தள்ளித்தான் நிக்கணும்”
என்று வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். ஆனால் இன்று? நடிப்பு எனும் பெயரில் கண்டவனோடு உரசி, அணைத்து, கட்டிப்புரண்டு.....

ஆபாசமான படங்களால் பெண்ணினம் அசிங்கப்படுத்தப்படுகிறது என்று சாடும் முன், அந்தப்படத்தில் ஒரு பெண் நடிக்கிறாளே, அவளை உங்களால் தடுக்க இயலுமா? அங்கே, பெண்ணை போகப்பொருளாக சித்திரிக்க ஒரு பெண்ணும் ஒத்துழைக்கிறாள் என்பதை யார் மறுக்க இயலும்? பழைய தமிழ்ப்பெண் போல “முடியாது” என்று எல்லா பெண்களும் சொல்வது தானே?

பெண்ணுடலை போகப்பொருளாக சினிமாக்கள் சித்திரிக்கின்றன. இதை பார்க்கும் இளம் உள்ளங்கள் என்ன நினைக்கும்? பெண் என்பவள் போகப்பொருள் என்று தானே இன்றைய குழந்தை – நாளைய இளைஞன் நினைப்பான்?

பெண்களின் அம்மாக்களுக்கும் ஒரு பங்கு உண்டு. தாங்கள் படாத கஷ்டத்தை பட்டு உழன்றதாக நினைத்துக்கொண்டு “உனக்கென்னடி ராஜாத்தி, படிப்பிருக்கு, சம்பாதிக்கறே, யாருக்கும்/எவருக்கும் நீ அடங்கிப்போக வேண்டியதில்லை” என்று மகளை கொம்பு சீவி விட்டு வளர்த்தெடுத்ததின் பலனை இன்று நாம் காண்கிறோம்.

“அனுசரிச்சுப்போம்மா” என்று சொன்ன காலம் போய், “எதா இருந்தாலும் பாத்துக்கலாம், நாங்க இருக்கோம்” என்று மல்லுக்கட்டும் மனோபாவத்தோடு பெண்களை அனுப்புவது. இவர்கள் நல்ல கணவனையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து தனது வாழ்க்கையையும் பாழாக்கி பிறர் வாழ்வினையும் கெடுக்கிறார்கள்.

நல்ல பெண்களும் இருக்கிறார்கள். அவர்களையே நான் காண விரும்புகிறேன்.

பெண்மை பூத்துக்குலுங்கும் பெண்களும், உண்மையான ஆண்மை மிளிரும் காளைகளும் சந்தித்தால் அங்கே சண்டையே இருக்காது. இன்றைய பிரச்னை ஆண்மை மேவிய பெண்களும், பெண்மை மேவிய ஆண்களும் தான்.

அனுபவம் உடைய, நிறைந்த குடும்ப வாழ்வில் ஊறித்திளைக்கும் நற்குலப்பெண்கள் நான் சொல்வதை ஆமோதிப்பர். பெண்ணிய புலிகள்  பாய்வர்.