Disable text selection

September 7, 2012

படித்ததில் பிடித்தது: துரோணரின் அறிவுரை

அபிமன்யு அநியாய விதமாக ஜெயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக "நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்கு பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் நான் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்" என கோரமான சபதம் பண்ணினான்.

ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது. வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்கு காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்கு தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். "இதோ அருச்சுனன், இதோ விஜயன்" என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைதான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை  பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம்  கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது.  அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி.  "யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான்" என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். சஞ்சயனும் "உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும்,  அருச்சுனனும் சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது" என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். அந்த பகுதியே இது.

"துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? "சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்" என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன் ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?
பயந்து போன இந்த படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

சாதவத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனை போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்?

இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது என, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என  ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை."

இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தெனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

2 comments:

Alasiam G said...

மிகவும் அருமையானப் பகுதி மொழிபெயர்ப்பும் அருமை.
தோல் உரித்த நாகத்தை ஒரு உவைமையாக கூறுவது நான் முதன் முதலிலே கேட்க்கும் ஒரு உவமை.
தாங்கள் படித்ததில் பிடித்த இப்பகுதி எனக்கும் பிடிக்கிறது.

பகிர்விற்கு நன்றிகள் சகோதரரே!

bdharmal said...

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள், சகோதரரே.... ஆம், ஆயுதங்களுக்கு சர்ப்பங்களை உவமையாக வடமொழியில் சொல்லுவது உண்டு!